திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சபல பெண்களும், ரவுடிக்கும்பலும்...

ஆன்மீக மணம் கமழும் பக்தி பரவசமான திருவண்ணாமலை நகரம் இப்போது போக்கிலிகளின் அட்டகாசங்களால் பீதியில் உறைந்து போய் கிடக்கிறது. இளம் பெண்களையும், குழந்தைகளையும் கடத்திச் செல்லும் கூலிப்படை கும்பலால் பெற்றோர்களும், உற்றார்களும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

‘தனது இளம் வயது பேத்தியை திரும்ப ஒப்படைக்க இரண்டரை கிரவுண்ட் இடத்தை எழுதித் தரவேண்டும்’ என்ற போக்கிலி கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்து போயுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சரோஜா.

அங்குள்ள மண்ணடித் தெருவில் வசித்துவரும் சரோஜாவின் மகள் கவுரி. திருமணமாகி 3 பெண்பிள்ளைகளுக்கு தாயான கவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்கிலி ஒருவருடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை மயக்கி அழைத்துச் சென்ற போக்கிலி ராஜேஷ் என்பவர், கவுரி குடும்பத்திற்கு சொந்தமான 25 பவுன் தங்க நகைகள், மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாத அவர்கள் கவுரியின் 3 மகள்களையும் தங்களுடன் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்பிள்ளைகள் போக்கிலி கும்பலிடம் சிக்கி சீரழிவதை தடுப்பதற்காக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கவுரி குடும்பத்தினர் கேட்டுள்ளனர். குறைந்த பட்சம் நந்தினி என்ற 15வயது பெண்ணை மட்டுமாவது விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த போக்கிலி கும்பல், நகரின் முக்கிய பகுதியில் உள்ள கவுரி குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தை எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெண்ணை ஒப்படைக்க முடியும் என மிரட்டியுள்ளனர்.

போக்கிலிகளின் மிரட்டலால் பயந்துபோன கவுரியின் கணவர் ஊரைவிட்டே ஓடிவிட, உறவினர்கள் மட்டும் தைரியமாக பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததெலலாம் அடி - உதை மட்டுமே. கொலை செய்துவிடுவதாகவும் போக்கிலிகள் மிரட்டியதால் உயிர்பயத்தில் காவல்துறையின் உதவியை நாடினார் கவுரியின் தாயார் சரோஜா. தனது பேத்தியை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்றவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் பேசிய விதம் பேரிடியாய் இறங்கியது. புகாருக்குள்ளானவர்களை அழைத்து விசாரிக்கக்கூட முன்வராத காவல்துறை அதிகாரிகள், போக்கிலிகளுக்கு ஆதரவாக சமாதானம் செய்து வைப்பதிலேயே முனைப்பு காட்டினர்.

இளம்பெண்ணை மீட்கப்போராடும் சரோஜாவுக்கு மட்டுமல்ல. தனது 2 வயது மகனை மீட்க போராடும் அரசு ஊழியரான சங்கருக்கும் இதேநிலைதான். 4 மாதங்களுக்கு முன்பு நான்கரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகளுடன், மனைவி நித்யா மற்றும் 2 மகன்களை போக்கிலிக்கும்பல் அழைத்துச் சென்றுவிட, 2 வயது மகனை மட்டுமாவது மீட்டுவிட துடிக்கிறார் சங்கர். மகனை ஒப்படைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் புல்லட் சிவா என்ற போக்கிலி, தரமறுத்தவர்களை அடியாட்கள் மூலம் அடித்து விரட்டியுள்ளார்.

வேறு வழியே இல்லாமல் காவல் நிலையத்தை நாடிய சங்கருக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமே மிஞ்சியது. இவர்கள் மட்டுமல்ல சத்யா, பரிமளா என பணம் மற்றும் சொத்துக்காக போக்கிலிகளால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. போக்கிலி கும்பலுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள மறைமுக ஒப்பந்தமே இதற்கு காரணம் என கண்ணீருடன் கூறுகின்றனர்.

காவல்துறையினரின் ஆசியுடன் புல்லட் சிவா தலைமையிலான போக்கிலி கும்பல் செய்யும் அட்டுழியங்களை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிட...! ஒவ்வொன்றும் அசிங்கத்தின் உச்சகட்டம். கவர்ச்சியான உடையணிந்து, உயர்ரக இருசக்கர ஊர்திகளில் உலா வரும் இந்த கும்பல், வசதியான குடும்பப்பெண்களை மயக்குவதையே வேலையாக செய்கின்றனர். அவர்களில் பெரிய அளவில் பின்புலம் இல்லாத பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்செல்லும் போக்கிலிகள், பெண்களின் வீட்டிலிருக்கும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்குகின்றனர். இதனையே தொடர் தொழிலாக செய்யும் போக்கிலிகள், அடுத்த பெண் கிடைத்ததும் முந்தைய பெண்களை அடித்து துரத்திவிடுகின்றனர்.

பெண்களை ஏமாற்றுதல், தட்டிக்கேட்பவர்களை அடித்து உதைத்தல் என போக்கிலி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த புகார்களை பதிவு செய்யவே மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து செய்வதன் மூலம் காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை என சிவா தலைமயிலான போக்கிலி கும்பல் மீது கூறப்படும் அனைத்து புகார்களும் கிடப்பில் போடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்புடன், பல போக்கிலி கும்பல்களின் ஆதரவும் இருப்பதால் இந்த கும்பலின் அட்டூழியம் எல்லை மீறிச்செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதனால் பல குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அற்ப மகிழ்ச்சிக்காக சில குடும்பப் பெண்களும் போக்கிலிகளுக்கு துணைபோவதால் அவர்களது குடும்பமே அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்கிலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமே இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏலச்சீட்டு மோசடி, நிதிநிறுவன மோசடி போல இதுவும் தொடர்கதையாகிவிடும் என எச்சரிக்கின்றனர்.

போக்கிலிகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் இருப்பதே இந்த கும்பலின் அத்துமீறல்களுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் அதனை மீறும் போக்கிலிகளுக்கு துணைபோவதை தடுக்காதவரை எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. எது எதுக்கோ தனிப்படை அமைக்கும் காவல்துறையினர் போக்கிலிகளை ஒழிக்க தனிப்படை அமைக்க முன்வராதது ஏன்? அவர்களால் வரும் வருமானம் குறைந்துவிடும் என்பதற்காகவா? அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என்பதாலா? என அடுக்கடுக்காய் எழுகின்றன கேள்விகள்.

போக்கிலிகள் தமிழகத்தை விட்டே விரட்டப்படுவார்கள் என பதவியேற்ற நாளிலேயே சூளுரைத்தார் முதலமைச்சர். ஆனால் வேலியும், ஆடும் சேர்ந்து பயிரை மேய்வதுபோல் காவல்துறையினரும், போக்கிலிகளும் சேர்ந்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்துமீறும் போக்கிலிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருவண்ணாமலை மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக