திங்கள், 27 டிசம்பர், 2010

என்ன செய்து கிழித்தாய்...?


இன்று காலை வழக்கம் போல் வீட்டுக் காலண்டரை கிழித்தபோதுதான் தெரிந்தது இந்த வருடத்தில் இன்னும் 5 நாட்கள் மட்டுமே மிச்சமிருப்பது. அட ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிடுச்சா என ஆச்சர்யபட்டபோதுதான் என்னை பார்த்து காலண்டர் கேட்டது (படபடவென பறந்தபடி) “ இந்த ஒரு வருடத்தில் என்ன கிழிச்சிட்ட நீ என்னத்தவிர” . இந்த கேள்விக்கான பதிலை பல மணிநேரம் யோசித்தபோதும் உருப்படியா எதுவும் கிழித்தது போல் தோன்றவில்லை. 360 நாட்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாடியபோது என்ன நினைத்தோம்...! அதில் என்னவெல்லாம் செய்து முடித்தோம்...! என்று யோசிக்கிறேன்,யோசிக்கிறேன், யோசிக்கிறேன், இன்னும் யோசிக்கிறேன்... ம்ம்ம்... எதுவும் செய்யல... சரி அடுத்தவருடமாவது இதையெல்லாம் செஞ்சிருவோம்!!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வரலாற்றுச் சுவடுகளில் வரலாற்று பிழை

“தினத்தந்தியில வந்தா சரியாத்தான் இருக்கும்” இது தமிழ்நாட்டு வாசகர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அப்பேர்பட்ட தினத்தந்தி ஒரு வரலாற்று நூலை வெளியிடுகிறதென்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன? வளர்ந்துவரும் வாசகன் என்ற அடிப்படையில் தினத்தந்தியின் “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் மீது எனக்கும் இருந்தது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதனை சற்றும் பொய்யாக்காமல் கடந்த 30ம் தேதி (30.11.2010) வெளியிடப்பட்டது “வரலாற்றுச் சுவடுகள்”. சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தினத்தந்தியின் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி பெற்றுக்கொண்டார்.





இந்த நூலை எப்படியாவது வெளியானவுடன் வாங்கி படித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு 3வது நாளில்தான் புத்தகம் கிடைத்தது. நீண்டகாலமாய் வரலாற்று புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த எனக்கு “வரலாற்றுச் சுவடுகள்” ஒரு புதையல் போலவே தெரிந்தது. புரட்ட புரட்ட புரண்டு கொண்டிருந்த 864 பக்கங்கள், 308 கட்டுரைகள், பக்கத்துக்கு பக்கம் வண்ணப்படங்கள் என வரலாற்று பொக்கிஷம் என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த புத்தகம். எடுத்த எடுப்பிலேயே அட்டை டூ அட்டை படிப்பதையே வழக்கமாக கொண்டதால் (முன், பின் அட்டைகளின் உள் மற்றும் வெளிப்பக்கங்களை முதலில் படித்துவிடுவேன், அதுதான் அட்டை டூ அட்டை) எனக்கு இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்று குறைவதைப்போல பட்டது. ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தபோதுதான் புரிந்தது நூலின் தலைப்புக்கு கீழே இடம்பெறும் நூலாசிரியர் பெயர் இடம் பெறவில்லை என்பது. ஒருவேளை செய்தித்தாளில் வெளிவந்த தொடரின் தொகுப்புதானே என்று நினைக்கத் தோன்றினாலும் அதற்கான குறிப்புகளும் அந்த வரிசையில் இல்லை.(சந்தேகமிருந்தால் புத்தகத்தை வாங்கி பார்க்கவும்) ச்சே... ச்சே... தினத்தந்தி வெளியிட்ட நூலில் இப்படி ஒரு குறையா? இருக்கவே இருக்காது என்ற அதீத நம்பிக்கையில் மறுபடியும் தேடினேன். இம்முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது நூல் வெளியீட்டு விழாவிலும் அதுகுறித்த வார்த்தைகள் ஒலிக்கவேயில்லை. மீண்டும் யோசித்து பார்த்தபோதுதான் புரிந்தது, விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் உள்பட அனைவரும் தினத்தந்தியையும், அதன் அதிபர்களையும் வானளாவ புகழ்ந்தார்களே தவிர, நூலாசிரியர் குறித்து மருந்துக்கூட வாய்திறக்கவில்லை என்ற உண்மை. சரி தினத்தந்தி வெளியிட்ட செய்தியிலாவது அரிய ஆவணங்களை தொகுத்த ஆசிரியரின் பெயரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து பேப்பரை புரட்டினால் (01.12.2010ஆம் தேதி இதழ்) அங்கும் ஏமாற்றமே. ஆறுமணிக்கு நடைபெற்ற விழாவை 3 மணிமுதலே தொகுத்து வெளியிட்ட தினத்தந்தி வரலாற்றுச் சிறப்பை தனக்கு பெற்றுத்தந்திருக்கும் நூல் ஆசிரியரை ஏனோ மறந்துவிட்டது. என்னடா இது ஒரு சிறந்த நூலை படித்துவிட்டு அதன் ஆசிரியரை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி? என ஆர்வம் உந்த நண்பர்களிடம் வரலாற்றுச் சுவடுகளின் ஆசிரியர் குறித்து விசாரித்தேன். அப்போதுதான், மூத்த பத்திரிக்கையாளர் ஐ. சண்முகநாதன் அவர்கள்தான் இந்த புகழுக்குச் சொந்தக்காரர் என்பது தெரிந்தது. நண்பர்களிடம் எனது ஆர்வத்தை பகிர்ந்து கொண்டபோதுதான் தெரிந்தது சண்முகநாதன் ஐயா எழுதிய “ஒரு தமிழனின் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு” மற்றும் “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு” ஆகிய நூல்களுக்கு கிடைத்த வரவேற்பு. அதனால் அந்த புகழே போதுமென தன்னடக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும் நண்பர்கள் வாயிலாக அறிந்தேன். “தன்னடக்கம் பேணுதல் சான்றோர் குணம்” என்றாலும் “உழைத்தவர்களை உயர்த்தி பேசுவதுதானே ஆன்றோர்க்கு அழகு” என்ற கேள்வி மட்டும் ஏனோ எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. விழாவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு வேண்டுமானால் அவரின் பெருமை தெரியாமல் போயிருக்கலாம் (அல்லது தெரிந்தும் பேசாதிருந்திருக்கலாம்). ஆனால் தனக்கு புகழை தேடித்தந்தவரை தினத்தந்திக்கு தெரியாதா என்று சிலர் கேட்டுவிட்டால்? இது உழைப்புச் சுரண்டல் என்று பேசிவிட்டால்? அது நான் நேசிக்கும் தினத்தந்திக்கு அவப்பெயராகிவிடுமே என்ற அச்சத்தில்தான் இதனை இங்கே பதிவு செய்கிறேன். பாரம்பரியமிக்க தினத்தந்தியின் வரலாற்றில் இத்தகைய தவறுகள் வரலாற்று பிழையாக மாறிவிடும் என்பதை உரியவர்கள் உணரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

“ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சாதிவாரி... சாத்தானா? சாதனையா?


நீ என்ன சாதி...? விரைவில் வீடு வீடாக அரசு ஊழியர்கள் கேட்கப்போகும் கேள்வி இது? ஆம் 80 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கப்போகும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில்தான் இந்த கொடுமை அரங்கேறப்போகிறது. சாதியை கேட்பதில் என்ன கொடுமை? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அது கொடுமைதான்! இதை நான் சொல்லவில்லை நமது அரசே சொல்லி இருக்கிறது... சாதாரண கொடுமை இல்லையாம் வன்கொடுமை என்று சொல்லி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்க வழி செய்கிறது PCR Act எனப்படும் Protection of Civil Rights act.தீண்டாமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின்படி கீழ் சாதியை சேர்ந்த ஒருவரை அவரின் சாதியின் பெயரை கூறி திட்டினால் அது குற்றம். இதற்காக பதிவான வழக்குகள் ஏராளம்.இப்படி ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கும் நமது நாட்டில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போகிறார்கள். சாதியை சொல்வதே குற்றம் என்றால் வீடு வீடாக போய் அதனை கேட்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா? அதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு யார் தண்டனை அளிப்பது?

அவசியதேவை

இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதேநேரத்தில் எதற்காக சாதிவாரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. இப்போதுள்ள நிலையில் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை விட பொருளாதார இடஒதுக்கீடே அவசியமானது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்களின் கருத்து. நாடாளுமன்ற சபாநாயகர் (இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்) உள்ளிட்ட தலைவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்

போலிகள் ஜாக்கிரதை

சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கோருவது சாதியைக் காப்பாற்றுவதற்காக அன்று; மாறாக சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால்தான் பெற முடியும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது ஒரு பிரிவு அரசியல் தலைவர்களின் வாதம்.இந்த வாதத்தை தமிழகத்தில் MGR முதலமைச்சராக இருந்தபோது வலியுறுத்திய தலைவர்களிடம்,ஒவ்வொரு சாதியிலும் உள்ளவர்களின் விபரங்களை அளிக்கும்படி கேட்டார் MGR. அதன்படி அவர்கள் கொடுத்த ஒவ்வொரு சாதி மக்களின் எண்ணிக்கையும் அப்போதைய ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட 3 மடங்கு அதிகமாம் !இப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டால் யோசிக்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான வைப்புகள் அதிகம் என்பதை மறுக்கமுடியாது. ஏனெனில் வாக்காளர் பட்டியலில் மக்களின் பெயரைச் சேர்க்கவே போட்டிபோடும் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி பலம் வாய்ந்தது என்பதை காட்ட இதிலும் முயற்சிப்பார்கள். எனவே சாதிவாரி கணக்கெடுப்பில் போலிகளை தடுக்க வேண்டியது அவசியம்.இல்லையென்றால் சாதனையாக வேண்டிய சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டிற்கே சாத்தானாக மாறிவிடும்.

வெள்ளி, 30 ஜூலை, 2010

நாடாளுமன்றமா? நாடகமேடையா?


ஒரு நாளைக்கு ஒரு கோடி ... இது லாட்டரி குலுக்கலில் விழும் பரிசுத்தொகை அல்ல, நம் நாட்டின் நாடாளுமன்றம் ஒரு நாள் செயல்பட ஆகும் குறைந்தபட்ச செலவு. அதுவும் என்ன செயல்பாடு தெரியுமா? காலை 11 மணிக்கு 5 நிமிடம், 12 மணிக்கு 5 நிமிடங்கள், விருப்பம் இருந்தால் பிற்பகல் 2 மணிக்கு 5 நிமிடங்கள் யாரையும் பேச விடாமல் கூச்சல் போடத்தான் இந்த செலவு. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூடதொடரின் போதும் விலைவாசி பிரச்சனை, ஊழல் என ஏதாவது ஒரு காரணத்தை காட்டி கூச்சல் போடும் எதிர்க்கட்சியினருக்கு தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் கிடைத்திருப்பது விலைவாசி உயர்வு பிரச்சனை. இப்பிரச்சனையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க கோரியும், வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நடக்கும் அமளிகளால் நாடாளுமன்றம் முடங்கியதுடன், மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது. மக்களின் பிரச்சனையை தீர்க்க போராடுவதாக கூறி அவர்களின் வரிப்பணத்தை வீணடிப்பது எந்த வகையில் நியாயம்?

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே ஒதுக்கொள்ளகூடாது என்பதை எழுதப்படாத விதியாகவே பின்பற்றி வருகின்றன ஆளும் கட்சிகள். அவர்கள் எதைகேட்டாலும் தாங்கள் நினைத்ததை மட்டுமே செய்யப்போகிற ஆளும் கட்சி அவர்களை விரும்பியபடி கேள்வி கேட்ககூட அனுமதி மறுப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்று கருதுகிறார்கள். விளைவு நாடாளுமன்றத்தில் அமளி! அடுத்தடுத்து அவை ஒத்திவைப்பு ! என்ற செய்தியை மட்டுமே பார்க்கமுடிகிறது வெகுஜனம். ஆள்பவர்களோ, எதிர்க்கட்சியினரோ தாங்கள் செய்வதுதான் சரி என்ற கொள்கையோடு செயல்படும்வரை இந்த நிலை தொடரத்தான் செய்யுமமக்களாட்சி நடத்துகிறோம் என்று மார்தட்டும் ஆளும் கட்சி மக்களுக்காக ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்கொள்ள கூடாதா? இதுகூட முடியாவிட்டால் உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்!

(பொ)கோழி கூவி பொழுது விடியாது என்பதைப்போல் எத்தனை கத்தினாலும் விலையை குறைக்கமாட்டர்கள் என்று தெரிந்தும் எதிர்க்கட்சிகளின் இந்த வீம்பு ஏன்? வழக்கமான கேள்வி நேரத்தில் இப்பிரச்சனையைவிவாதித்தால் கேள்விகளை மறந்து விடுவீர்களா என்ன? அதெல்லாம் முடியாது மக்களின் முக்கிய பிரச்சனையை தீர்த்தபின்தான் அடுத்தவேலை என்று முடிவு செய்தால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிடுங்கள் அப்புறம் அவர்கள் எப்படி நாடாளுமன்றத்தை கூட்டுவார்கள் என்று பார்ப்போம் !!!அதவிட்டுட்டு சும்மா அமளி ! கண்டனம் ! போராட்டம்னு!.. போங்க பாஸ், வீட்ல சின்ன பசங்க யாராவது இருந்த வரசொல்லுங்க ... !

வியாழன், 4 மார்ச், 2010

புத்தி வ(ள)ரட்டும்...

உபதேசம் எல்லாம் ஊருக்குதான் என்பதை
காட்சிகள் மூலமே சொல்லியிருக்கிறார் நித்யானந்தா...



நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சல்லாபிக்கும்
காட்சிகள் வெளியானதன் மூலம் தானும் ஒரு பிரேமானந்தா என்பதை
நிருபித்துள்ள நித்யானந்தா (எ) ராஜசேகரனுக்கு ஊருக்கு ஊர் மடம் வேறு,
அதுவும் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சற்றும் சளைக்காத வகையில்...
திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனுக்கு
எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்துக்கள்.
அவ்வளவும் பக்தி என்ற பெயரால் அல்லது பக்தி என்ற போர்வையில்
மக்கள் கொடுத்ததே...
ஏதாவது பிரச்சனையில் சிக்கும்வரை சாமியார் காலடியில் விழுந்து கிடப்பது
பிரச்னை என்றவுடன் இவன நம்பி ஏமாந்துவிட்டேனே..என்று கூறுவதையே
வழக்கமாக கொண்டுள்ளது ஒரு கூட்டம். இன்னும் ஒரு
கூட்டமோ என்ன நடந்தாலும் திருந்துவதாக இல்லை.அப்படிதான்,
பிரேமானந்தா, சதுர்வேதி,திவேதி, என காமாந்த சாமியார்கள் வரிசையில்
இடம்பிடித்தாலும் நித்யானந்தாவிற்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம்
இன்னும் "எங்க சாமிக்கு ஒன்னுமே தெரியாது" அவரு பப்பா என்றெல்ல்லாம்
சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்றவர்கள்தான் சாமியார்களை உருவாக்குகிறார்கள்...
தனி ஒரு மனிதன் சாமியார் மயக்கத்திலிருந்து விடுபடாதவரை
நித்யானந்தாக்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்...
இனி எவனாவது
கதவைத்திற காற்று வரட்டும்...என்று சொன்னால் செருப்பால் அடி புத்தி வரட்டும்....

வியாழன், 25 பிப்ரவரி, 2010

வாழ்க்கை...


ஓடிக்கொண்டே இரு...
(நீ) ஜெயிக்கும் வரை...

திங்கள், 1 பிப்ரவரி, 2010

"நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை"


முதல் தமிழன்...
நான்காவது இந்தியன்....
இது கிராமி விருது பெற்றோர் பட்டியலில் ரஹ்மானுக்கு கிடைத்திருக்கும் இடம்.

இதுவரை கிராமி விருது பெற்ற இந்தியர்கள்:

1.Sitar maestro Pandit Ravi Shankar was the first Indian musician to bag a Grammy way back in 1967 for his performance West Meets East.
He followed it up with a second trophy in 1972
Shankar got third time lucky in 2001 when he won a Grammy for his album Full Circle - Carnegie Hall 2000 in the Best World Music Album category.

2.Tabla wizard Zakir Hussain his first Grammy in 1992 for his album Planet Drum(The Best World Music category)

Last year after a gap of 18 years Hussain won the Grammy yet again in the Contemporary World Music Album category for his collaborative album Global Drum
The album also featured other Indian names like Taufiq Qureshi on percussion and vocals, Niladri Kumar on Sitar and Dilshad Khan on the Sarangi.

3.Lastly Vishwa Mohan Bhatt who has the distinction of creating the Mohan Veena, won the Grammy along with guitar guru Ry Cooder for A Meeting by the River in the World Music Album section in 1994.

இவர்களின் வரிசையில் இணைந்திருக்கும் ரஹ்மானுக்கு இரண்டாய் கிடைத்துள்ளது கிராமி விருது.
இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தின்மூலம்இந்தாண்டுக்கான சிறந்த சவுண்ட் டிராக் மற்றும சிறந்த பாடல் ( ஜெய் ஹோ ) ஆகியவற்றுக்கு இரண்டு கிராமி அவருக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
லாஞ் ஏஞ்சல்ஸ்சில் நடந்த விழாவில் விருதினை பெற்ற ஏர்.ஆர்.ரகுமான் பேசுகையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கடவுள் மீண்டும் ஒருமுறை இவ்விருதினை தமக்கு வழங்கியுள்ளார்.
இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவரதும் பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறினார்.

5 தேசிய விருதுகள்,
2 ஆஸ்கார் விருதுகள்,
கோல்டன் க்ளோப் விருது, எனஅடுத்தடுத்து விருதுகள் பெற்று "நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை"
என்ற பாரதியின் வரிகளை உண்மையாக்கும் வகையில் எட்டுத்திக்கும் தமிழனின் புகழை பரவ செய்திருக்கும் சாதனை தமிழன் மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துவோம்...
ஜெய் ஹோ...