வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆளும் கட்சியின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

தமிழக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட (ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், இன்றே (22.09.2011) வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த, தேர்தல் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் புதிய குழப்பங்களும், கேள்விகளும் ஏராளமாய் எழுந்துள்ளன.


1. வழக்கமாக வேட்பாளர் தேர்வுக்காக குறைந்தது ஒருவார கால அவகாசம் அளித்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படும் நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்ட 14 மணிநேரத்தில் மனுத்தாக்கல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
2. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ஒருவாரத்திற்குள் வேட்பாளர்கள் நேர்காணல், தேர்வு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு அனைவரும் மனுத்தாக்கல் செய்யமுடியுமா?
3. பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான மாநகராட்சிகள் எவை? பொதுப்பிரிவினருக்கான மாநகராட்சிகள் எவை? என்பதும் இன்றுவரை தௌ¤வாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர்களை அறிவிப்பது எப்படி?
4. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் குளறுபடிகளுக்கு வழிவகுக்காதா?
5. முதல்கட்டத் தேர்தலுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கும் (அக்.17, 19) ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கள்ளஓட்டு பதிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒருவர் இருமுறை வாக்களிக்கும் ஆபத்து.
7. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதா?

இப்படி நீண்டுகொண்டே செல்லும் குழப்பங்களின் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.க மட்டும் எப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதைப்போல் ஆளும்கட்சிக்கு மட்டும் உள்ளாட்சி தொகுதிகள் குறித்த முழுப்பட்டியல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட சோ. அய்யரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, அவர் அ.தி.மு.க.வின் விசுவாசியாக செயல்படுவார் என்று புகார்கள் கூறப்பட்டன. அது உண்மையாவதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. அப்படியானால் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு என்பதெல்லாம் பொய்யா??????????

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜால்ரா சத்தம் ஓய்ந்தது...

“மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா” இந்த வசனம் கடந்த ஒருமாதகாலம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எத்தனை முறை ஒலித்தது என்று போட்டிவைத்தால் கணக்கில் புலி என சொல்பவர்கள் கூட நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி(!) உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகர் கூட வார்த்தைக்கு வார்த்தை இந்த வாசகத்தை உச்சரிக்க தவறவில்லை. சட்டப்பேரவை என்பது ஆட்சியாளர்களை புகழும் அவையாக இருந்து வருவது மரபு(!) என்றாலும் கடந்த ஒருமாதத்தில் இந்த ஜால்ரா சத்தம் சற்று அதிகமாகவே ஒலித்தது. இந்த வாசகத்தை கூறி அழைப்பதில் மட்டுமல்ல முதலமைச்சரை புகழ்வதிலும் கடும் போட்டி நிலவியது.

அமைச்சர்கள் 4 வரி பேசினால் அதில் நிச்சயம் இரண்டுவரி அம்மாவுக்கான புகழ்மாலையாக இருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இடதுசாரிகள் அடித்த ஜால்ரா அடுத்த கூட்டத்தொடர்வரை நிச்சயம் தாங்கும். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சிவகங்கை தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனின் பேச்சு. தமிழகத்தில் சில திட்டங்கள் நிறைவேற்றாப்படவில்லை என்ற புகாருக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போல் பழியைத்தூக்கி மத்திய அரசு மீது போட்டார். மத்திய அரசு போதிய நிதியை வழங்க மறுப்பதால்தான் அத்திட்டங்களை செயல்படுத்தமுடியவில்லை என்று கூறினார். அவரின் மனநிலையை உணர்ந்துகொண்ட குணசேகரன் பேசும்போது, இந்த பிரச்சனைகளை தீர்க்க விரைவில் மத்தியில் அம்மா தலைமையில் மாற்றத்தை (ஆட்சி) கொண்டுவருவோம் என்றபோது முதலமைச்சரே ஒருநிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். இவரை மிஞ்சமுயன்றவர்களில் முக்கியமானவர் சபாநாயகர் ஜெயக்குமார், இவர் தான் வகிக்கும் பதவியை சுத்தமாக மறந்துவிட்டு பேசினார் என்றே சொல்லலாம். பொதுவாக சட்டப்பேரவையில் சபாநாயகர்தான் முதன்மையானவர். அதற்குபிறகுதான் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம். ஆனால் இவர் சபாநாயகர் இருக்கையிலும் அதிமுகவின் அடிமட்டத்தொண்டனாகவே செயல்பட்டார். தான் செய்த தவறுகளை அனைவர் மத்தியிலும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் குறை கூறினாலும், அது ஏதோ தனக்கு வழங்கப்பட்ட விருதுபோல் நினைத்து இவர் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்கள் உதாரணம் மட்டுமே இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பலர் முயன்றதை நாள்தோறும் ஊடகங்களில் காணமுடிந்தது. (வெளியே தெரிந்ததே என்றால், உண்மையில் நடந்தது எவ்வளவு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஒருநாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளில் ஒருமணிநேரம் மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒருபுறம் ஜால்ரா சத்தங்கள் காதை பிளக்க மறுபுறம் மேசையை தட்டும் சத்தமும் தினசரி அவையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவையில் நடைபெற்ற விவாதங்கள் அல்ல விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கைகள்தான். (ஆளுநர் உரை உள்பட சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற மொத்த நாட்கள் 33. முதலமைச்சர் படித்த அறிக்கைகள் 21.)ஆட்சியில் இல்லாதபோது கொடநாட்டில் தங்கி அறிக்கை வெளியிட்டதை மறக்கமுடியாமலோ, என்னவோ சட்டப்பேரவையிலும் நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களைக்கூட எவ்வித எதிர்பேச்சும் இன்றி அறிக்கையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் தவறாமல் இடம்பெற்ற அம்சம் தி.மு.க.வை திட்டுவது. அவர் படித்த அத்தனை அறிக்கைகளிலும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது தி.மு.க.வுக்கும், அதன் தலைவருக்கும் அர்ச்சனைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அலாதியானது. அம்மாவே திட்டிவிட்டார் நாம் திட்டாவிட்டால் அம்மா கோபித்துக்கொள்வார் என்று கருதியோ என்னவோ, சாதாரணமாக கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. ஆட்சியை வறுத்தெடுத்த பின்னரே கேள்விக்கு வந்தனர்.

சரி, ஜால்ரா அடித்துவிட்டாவது அவரவர் கடமையை சரியாக செய்தார்களா என்றாலும் இல்லை என்பதே உண்மை. ஆம், எந்த துறையானாலும் முக்கிய அறிவிப்பு என்றால் அதனை முதலமைச்சர்தான் வெளியிடுவார், எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியது, அல்லது சம்பிரதாயத்துக்காக வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டார்கள். One Woman Government என்று சொல்லக்கூடிய அனைத்துமே அம்மாதான் என்பது இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில்கூட ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பல நாட்கள் அவைக்கு வராமல் ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக பேசவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அம்சங்களில் கூட பாராட்டுமழை பொழிந்தது மனசாட்சியுள்ளவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்யாத பணியை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், சிறையில் தி.மு.க.வினருக்கு அளிக்கப்படும் சிறப்பு கவனிப்புகளை சுட்டிக்காட்டி அரசை குறைசொன்னார். ஆனால் அவர் வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம். முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ள தே.மு.தி.க.வினர் எங்களுக்கு(அ.தி.மு.க) பாடம் நடத்தத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் அனல்கக்கும் பேச்சால் ஆடிப்போனது தே.மு.தி.க. அதன்பின்னர் அக்கட்சியினர் அனைவரும் கப்சிப். இதேபோல் மற்றவர்களை பின்பற்றி கடந்த ஆட்சியை குறைசொல்லி காரியம் சாதிக்க முயன்ற பா.ம.க.உறுப்பினர் கலையரசு அவமானப்படுத்தப்பட்டார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், நடுநிலையாக செயல்படவேண்டிய சபாநாயகர் ஜெயக்குமார் என நான்குபேரும் அவரையும், அவரது கட்சியையும் மட்டம்தட்டி பேசினர்.

அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டிய தி.மு.க.வினரோ இருக்கை பிரச்சனையை காரணம் காட்டி ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு சட்டப்பேரவையை ரணகளமாக்கவேண்டிய அவர்கள், அதனை திருக்குறள் கேட்கும் இடமாக மாற்றி வெளிநடப்பு நாடகம் நடத்தினர்.


மொத்தத்தில் திறமையற்ற எதிர்க்கட்சி, தவறை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சிகள், கேள்வி கேட்கத் தயங்கிய உறுப்பினர்கள் என சட்டப்பேரவை ஜனநாயகம் ஒருமாதத்திற்கும் மேலாக சங்கடப்படுத்தப்பட்டது. முதலமைச்சரை புகழ்வதற்கும், தி.மு.க.வை குறை சொல்வதற்கும் மட்டுமே பயன்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததால் ஜால்ரா சத்தம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.