வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மெரினா கடற்கரையில் பூவாடைக்காரி...


தம்பி ஜோசியம் பார்க்கிறிங்களா, கரெக்டா சொல்லுவேன் தம்பி... இந்த வசனங்களை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போதெல்லாம் கேட்டிருக்கிறேன். 5, 10 வருமானத்திற்காக இப்படி கேட்கிறார்கள் என்பதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போவது வழக்கம்... ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு மாலைநேரத்தில் நண்பருடன் மெரினா கடற்கரைக்கு சென்றபோது இந்தக்குரலை கேட்கவில்லை. சரி இன்றாவது ஜோசியக்காரர்கள் தொல்லை இல்லை என்ற நினைப்போடு, அலைகளின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த எங்களை, ஆள்நடமாட்டம் குறைந்த கடற்கரையின் ஒரு ஓரத்தில் ஒலித்த ஒரு பாட்டுச் சத்தம் நின்று திரும்பி பார்க்க வைத்தது. 10, 15 பெண்கள் கூடி நிற்க, 2பேர் உருமி மேளம் இசைத்துக்கொண்டு அந்த பாட்டை பாடிக்கொண்டிருந்தனர். 


ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்த நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, கூட்டத்தின் நடுவே மஞ்சள் உடையணிந்த குண்டு பெண்மணி நிற்க, அவருக்கு முன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் (பூவாடைக்காரி) உருவம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பக்தியுடன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த ஒருவர், அம்மன் முன் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணிற்கும் தீபாராதனைக்காட்டி ஏதோதோ கூறிக்கொண்டிருந்தார். வழக்கமாக கோவில் திருவிழாக்களின்போது மட்டுமே இத்தகைய காட்சிகளை பார்த்திருப்பதால், கடற்கரையில் இப்படி நடந்தது வினோதமாக இருந்தது. அதனால் கூட்டத்தோடு கூட்டமாய் சிறிது நேரம் நின்றபடி, அங்கு என்ன நடக்கிறது என ஒரு பெண்ணிடம் கேட்டோம்.


அருள் இறக்குறோம் தம்பி... பூவாடைக்காரிய வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறோம்... என்று அந்த பெண் பக்தியுடன் கூற, புரியலையே என்றோம். அதாவது தம்பி, அங்க நிக்குதே அந்தம்மாவோட மாமியார், மாமனார் செத்துபோனபின்னாடி வெளியிலேயே இருக்காங்க, அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்குத்தான் இந்த பூச, அதோ அங்க உக்காந்திருக்கே (அப்போதுதான் கவனித்தோம் கூட்டத்தின் அருகிலேயே மற்றொரு குண்டு பெண்மணி கன்னத்தில் அலகு குத்தியபடி உட்கார்ந்திருந்தார்) அந்த பொண்ணுதான் வீட்டுக்கு மூத்த மருமக, அது மேல நாகாத்தம்மன் அடிக்கடி வரும், அது வந்துதான் அவுங்க மாமியார் மாமனார் வெளியில் இருக்குறத சொல்லுச்சு, அவுகள வீட்டுல கூட்டிக்கிட்டு வரணும்னு பூசாரிங்க முடிவு பண்ணிணாங்க. அதுக்குதான் இது நடக்குது...என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாட்டு பாடியவரின் சத்தம் அதிகமாக அந்த பெண்ணும் கூட்டத்தில் ஐக்கியமானார். மறுபடியும் பூஜையும் பாட்டும்..... சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் அந்த பெண்ணிடம் எங்க இருந்து வர்றீங்க... இப்ப என்ன ஆச்சு என விசாரித்தபோது, நாங்க அம்பேத்கர் பாலம் ஏரியால இருந்து வர்றோம்.(சென்னை சிட்டி சென்டர் எதிரில்) கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நடந்த பூசையில் மூத்த மருமக மேல மாமியார் (ஆன்மா) வந்துட்டாங்க!!! அதுனால அவருக்கு அலகு குத்தி உட்கார வச்சிருக்கோம். ஆனா சின்ன மருமக மேல மாமனார் லேசுல வரமாட்டேங்குறார் தம்பி என்றார். அவரிடம் நாங்க தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் வேறொரு பெண் அருள் வந்து ஆடினார். உடனே பூசாரி, யார் நீ அப்படின்னு அதிகாரமா விசாரிச்சார், நான் பெருமாள்டா (பூசைக்காக நின்றுக்கொண்டிருக்கும் பெண்ணின் மாமனார்) என்னபார்த்தா யாருன்னு கேட்குற. அப்படின்னு பதில் சவுண்டு....

உன் சொந்தக்காரங்கிட்ட வரமா இவுங்க மேல ஏன் வந்த அப்படின்னு பூசாரி கேட்டப்போ அந்தம்மா சொன்னாங்களே பார்க்கலாம்... என் பேரை சொல்லாம மணிக்கணக்கா கூப்டா நான் எப்டிடா வருவேன்....(அடப்பாவிகளா இவ்வளவு நேரம் பேரையே சொல்லமாத்தான் பூசையா)
சரி உம் மருமக மேல வரியா.... பூசாரி
ம்ம்ம்...பாட்டுபாடி கூப்டு நான் வரேன்...... இது அருள்வந்து ஆடிய பெண் (சிறிது நேரத்தில் அவரும் மலையேறிவிட்டார்.)

மீண்டும் தொடங்கியது கச்சேரி

பூசாரியும், மேளக்காரர்களும் எத்தனையோ முறை பாடிப்பார்த்து அந்த பெண்ணுக்கு அருள் வராததால அவரோட புருஷன இழுத்துவந்து நிறுத்தனா. அந்தாளு புல் போதையில இருக்காரு...அதனால நாட்டாமை தீர்ப்பு மாதிரி செல்லாது, செல்லாதுன்னு சொல்லிட்டாரு பூசாரி....

அதுக்குள்ள இறந்தவங்களோட இன்னொரு மகன், போதை தெளியறதுக்காக கடல்ல முங்கிட்டு அப்படியே ஈரத்தோட வந்து நிக்க அதுவும் செல்லாம போச்சு..

இதுக்குள்ள கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு போரடிக்க, லேசா அருள் வந்தா போதும், அந்த பொண்ணுக்கு அலகு குத்தி கூட்டிட்டு  போவோம்னு தயாராகிட்டாங்க. உடனே பூசாரி கேட்டார்  ஏம்மா ஏதாவது தெரியுதா?(அருள் வர்றதுக்கான அறிகுறி). ம்ஹும்... ஒண்ணும்  தெரியல.. இது அந்த பெண்..

அருள் வர்றதுக்கான அறிகுறியே இல்லைன்னா அலகு குத்தக்கூடாதும்மா, அது என்ன சாதாரண காரியமா(?) நாம வீட்டுல போய் பூசைய கன்டினியூ பண்ணுவோம் அப்படின்னு பூசாரி அறிவிக்க, உடனே கூட்டம் புறப்படத் தயாரானது.. மறுபடியும் கச்சேரி பூவாடை, பூவாடையாம், பூவாடைக்காரி பாட்டோடு நகர்ந்தது அந்த கூட்டம்.

அடப்பாவிகளா... அறிவியல் வளர்ச்சியில உலகம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு.. ஆனா இன்னும் செத்தவங்கள மறுபடி வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்னு சொல்லிக்கிட்டு கடற்கரையில வந்து பூஜை நடத்திக்கிட்டு இருக்கிங்களே என்று எண்ணியபடி நாங்களும் அந்த இடத்தை விட்டு நடந்தோம்.

அலைகளின் ஓரத்திலேயே நீண்டதூரம் நடந்து சென்றாலும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் சத்ததை தாண்டி அந்த பூஜை காட்சிகளே மனதில் பிரதிபலித்தது.

பூஜைக்காக வந்திருந்த குடும்பம் படிப்பறிவில்லாத அடித்தட்டு குடும்பமாகவே இருந்தது. ஏதோ ஒரு கூலி வேலை பார்த்து பிழைப்பை ஓட்டுகிற குடும்பம் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஆனால் அந்த பூஜைக்காக மட்டும் அவர்கள் சுமார் மூன்றாயிரம் ரூபாய் வரை செய்திருப்பார்கள். (சில்வரால் ஆன அம்மன் உருவத்திற்கு மல்லிகை பூ அலங்காரம், பூஜை பொருட்கள், அலகு குத்த தேவையான பொருட்கள், 2 மேளக்காரர்களுக்கு சம்பளம், பூசாரிக்கு காணிக்கை.. etc..)

அவர்களது அறியாமையை பயன்படுத்திக்கொண்டு இவ்வளவு செலவு செய்ய வைத்தது மட்டுமல்ல... அவர்களை பலமணி நேரம் கடற்கரையில் நிறுத்தி, அலகு குத்தி, மேளதாளத்துடன் வேடிக்கைப் பொருளாக இழுத்துச்சென்ற பூசாரி கும்பலை என்ன செய்வது? சென்னை மாநகரின் நவநாகரீக மனிதர்களின் கூடாராமாக திகழும் சிட்டி சென்டரின் எதிரிலேயே வசித்துக்கொண்டு, இப்படி பூசாரிகளையும் , மூட நம்பிக்கையையும் நம்பி ஏமாறுபவர்களை எப்படி திருத்துவது?
ஒரு பெரியாரல்ல ஓராயிரம் பெரியார்கள் தோன்றினாலும் இவர்களை திருத்த முடியாதா? பெரியார் கொள்கையை பரப்புவதாக கூறிக்கொண்டு சுற்றி வருபவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? விளம்பரம் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் அவர்களது பிரச்சாரம் இருக்குமா? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எதிர்பார்ப்பில், எல்லோரையும் நம்பி ஏமாறும் அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டால் இதுபோன்ற மோசடிகள் குறையாதா? இப்படி பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமலேயே நீள்கின்றன....?????