ஞாயிறு, 20 மார்ச், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_02

1962 சட்டப்பேரவைத் தேர்தல்

“ நான் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டேன்,எனக்கு வயதாகிவிட்டது.தமிழகத்தின் நலனை காக்க காமராஜருக்கு வாக்களியுங்கள்” என்ற தந்தை பெரியாரின் உருக்கமான அறிக்கைதான் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் தொடக்கம். அன்றைய சூழலில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துவந்த தி.மு.க.வில் பிளவு, சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதமிருந்த தியாகி சங்கரலிங்கனார் மரணம். போன்ற பரபரப்புகள் அடங்காத நிலையில்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 21.02.1962ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.



1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வினர் 15 பேர் வெற்றிபெற்றதால் கடும் அதிருப்தியில் இருந்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், இத்தேர்தலில் (1962) தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்திருந்தார். குறிப்பாக தி.மு.க.வசம் இருந்த 15 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு புதிய வியூகத்துடன் காமராஜர் களம் இறங்கினார்.

அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில் வெற்றிபெறுவது என்ற உறுதியுடன் தேர்தலுக்குத் தி.மு.க. தயாரானது. இதற்காக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திரா கட்சியை தொடங்கி இருந்த ராஜாஜியுடன், தி.மு.க.தலைவர் அண்ணா கூட்டணி அமைத்தார். இதற்கு தி.மு.க.வினர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘தி.மு.க.வை தனது எதிரி என்று கூறிவந்த ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா’ என்று அக்கட்சியினர் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத அண்ணா திட்டமிட்டபடி சுதந்திரா கட்சியுடன் இணைந்து தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என அறிவித்தார். மறுபுறம் தி.மு.க.வில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய கட்சியை தொடங்கி இருந்த ஈ.வி.கே. சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனி அணியாக களமிறங்கினார்.

மும்முனை பிரச்சாரம்

‘தமிழ்நாடு பெயர்மாற்றம்’ ‘புதிய தொழிற்சாலைகள் திறப்பு’(திருச்சி பாய்லர் தொழிற்சாலை, ஆவடி ராணுவ டாங்க் தயாரிக்கும் தொழிற்சாலை) என 5 ஆண்டுகால (1957 - 1962) ஆட்சியில் காமராஜர் பெரும் நற்பெயரை சேர்த்திருந்தாலும் தி.மு.க.வினரை வீழ்த்துவதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார், காமராஜர்தான் தனது வாரிசு என்று வெளிப்படையாக அறிவித்தார்.



காமராஜரை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை என்று கூறிய அவர், இல்லாவிட்டால் தி.மு.க.குதிரையில் சவாரி செய்யும் ராஜாஜி தமிழகத்தை அழித்துவிடுவார் என்று எச்சரித்தார். சுயமரியாதை தலைவராக போற்றப்பட்ட பெரியாரின் இந்த அறிவிப்பு காமராஜரின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது. பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்றாலும் அவரையே தலைவராக நினைத்துகொண்டிருந்த அண்ணா, இந்த அறிவிப்பைக்கண்டு சிறிதும் கலக்கமடையவில்லை. தனது அழகுத் தமிழ் மற்றும் அடுக்குமொழி பேச்சால் மக்கள் செல்வாக்கை பெற முயன்றார்.



அண்ணாவின் பேச்சில் மயங்கிய மக்கள் அவர் செல்லும் இடங்களெல்லாம் அலைகடலென திரண்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜாஜியும், அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார். வெளிப்படையான ஜாதிக்கட்சிகளைவிட காங்கிரஸ் கட்சியில் சாதிப்பாகுபாடு தலைவிரித்தாடுவதாக அவர் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தார். தி.மு.க.வுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திரைப்படத்துறையினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பொதுக்கூட்டங்கள் களைகட்டின.


இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் திமுகவில் இருந்து வெளியேறிய தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே. சம்பத் பிரச்சாரம் செய்தார். ‘தி.மு.க.வில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அண்ணா ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார்’ என்ற சம்பத்தின் பேச்சுக்கள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன.இவருக்கு ஆதரவாக சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.

வியூகத்தால் வென்ற பெருந்தலைவர்



தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2வது சட்டப்பேரவைத் தேர்தலான இத்தேர்தலில் 38 இரட்டைத் தொகுதிகள் கலைக்கப்பட்டு அவற்றுக்கு இணையான ஒற்றைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதிகளையும், திமுகவினர் வசமிருந்த தொகுதிகளையும், கைப்பற்றுவதையே இலக்காக கொண்டு காலநேரம் பார்க்காமல் காமராஜர் ஆற்றிய களப்பணிக்கு கை மேல் பலன் கிடைத்தது. மொத்தமுள்ள 206 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 139 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. குறிப்பாக கடந்த தேர்தலில் தி.மு.க.வெற்றிபெற்ற 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வென்றனர். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுதந்திரா கட்சி வேட்பாளரை விட 13,444 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். (வாக்குகள் விபரம் : காமராஜர் - 46,950. ராமமூர்த்தி - 33,506.) ஆனால் இந்த வெற்றியை அவரால் முழுமையாக கொண்டாட முடியவில்லை காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி.

தி.மு.க.வின் வெற்றியும் - சோகமும்

1957ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற 15 தொகுதிகளை இழந்தாலும் புதிதாக 50 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக தனது வளர்ச்சியை பறைசாற்றியது. அக்கட்சியின் சார்பில் தஞ்சாவூரில் போட்டியிட்ட மு.கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்த நாடாரை 1,928 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.வாக்குகள் விபரம் : மு.கருணாநிதி - 32,145. பரிசுத்த நாடார் - 30,217. (1957ல் குளித்தலையில் வெற்றிபெற்ற கருணாநிதி 1962ல் காமராஜரின் வியூகத்தை அறிந்து தொகுதி மாறியதாகவும் கூறப்படுவதுண்டு). கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நெடுஞ்செழியன் திருவல்லிக்கேணி தொகுதியில் 10,370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 50 தொகுதிகளை தி.மு.க.வினர் அதிரடியாக கைப்பற்றியபோதும் அதனை உற்சாகமாக கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். காரணம் கட்சியின் தலைவர் அண்ணா தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் 9,190 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரிடம் தோல்வியடைந்தார்.( நடேச முதலியார் - 46,018. அண்ணா - 36,828.)

தோல்வியும் நன்மைக்கே!

‘தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிடப்போவதில்லை, எனது தம்பிமார்கள் 50பேரின் உருவில் சட்டசபைக்கு செல்கிறேன்’ என தோல்வியைக்கூட ஏற்றுக்கொண்டார் அண்ணா. தோல்வியிலும் ஒரு நன்மை உண்டு என்பது அண்ணா விஷயத்திலும் நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால், நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அங்கு தனித் தமிழ்நாடு கேட்டு அவர் ஆற்றிய உரை அண்ணாவின் புகழை தேசம் முழுவதும் கொண்டு சேர்த்தது.

அண்ணா தோல்வியிலும் வெற்றியைக் கண்டாலும் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக சரிவு தொடங்கியது. இதனால் 1962ல் பெற்ற வெற்றியே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற கடைசி வெற்றியானது... (தொடரும்)

வெள்ளி, 4 மார்ச், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_01

1956, மே 17.
பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களால் திணறிக்கொண்டிருந்தது திருச்சி மாநகரம். திமுகவின் 4 நாள் மாநாடு அன்று தொடங்கியதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சாரைசாரையாக மலைக்கோட்டை மாநகரில் அணி திரண்டனர் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி சகாப்தம் தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவாக அமைந்த அந்த மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது குறித்து ஜனநாயக முறைப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு தனித்தனி வண்ணங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கெடுப்புத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் தொண்டர்கள் போட்டி போட்டு தங்கள் கருத்துகள் அடங்கிய சீட்டுக்களை பெட்டியில் போட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் எண்ணம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாகவே இருந்தது. உயர்ந்த எண்ணத்தால் நிறைந்திருந்த அவர்களின் மனங்களை குளிர வைக்கும் வகையில் கனமழையும் கொட்டியது. நீண்டநேரம் கொட்டிய மழையிலும் வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்றது. முடிவில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருந்தது. இதனை வலியுறுத்தி 56,942பேர் வாக்களித்த நிலையில், இக்கருத்துக்கு எதிராக 4,203 பேர் வாக்களித்தனர். இந்த முடிவுகளின் படி தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் மாநாட்டில் வகுக்கப்பட்டது.

அதேநேரத்தில் தமிழகத்துடன் இணைந்திருந்த ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்த தலைவர்கள் ஒருபுறமும், குலக்கல்வியை அறிமுகப்படுத்தியதால் முதலமைச்சர் பதவியை இழந்த ராஜாஜியின் ஆதரவாளர்கள் மறுபுறமும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 2வது நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக முதல்முறையாக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும் களமிறங்கியது.

தன்னம்பிக்கை தளராத கர்மவீரர்

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருந்த பிளவு இத்தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. சாத்தூரில் போட்டியிட்ட முதலமைச்சர் காமராஜரை எதிர்த்து அவரது கட்சியினரே சீர்திருத்த காங்கிரஸ் என்ற பெயரில் ஜெயராம ரெட்டியார் என்பவரை வேட்பாளராக நிறுத்தினர். அதேநேரத்தில் திமுக தேர்தலில் பங்கேற்பதை விரும்பாத தந்தை பெரியார் காமராஜருக்கு ஆதரவளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களுக்கு காமராஜர் செய்த நன்மைகளுக்காக அவரை சொந்தக்கட்சியில் உள்ள பிராமணர்களே தோற்கடிக்க முயற்சிப்பதாக கூறியிருந்தார். காமராஜரை முதலமைச்சராக நீடிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் பெரியார் அறிவித்தார்.



சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தாலும் பெரியாரின் ஆதரவை காமராஜர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பெரியாரின் திராவிடர் கழகம் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தால் அவது அவர்களது இஷ்டம். நான் அதை கேட்கவில்லை” என்று அதிரடியாய் அறிவித்தார்.



காங்கிரஸ், திமுக, சீர்திருத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் என ஏராளமான கட்சி வேட்பாளர்களும் களமிறங்கியதால் தேர்தல் பரப்புரை களை கட்டியது. விறுவிறுப்பான பல நிகழ்வுகளுக்கு மத்தியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி காமராஜர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராஜருக்கு 36, 400 வாக்குகளும், ஜெயராம ரெட்டியாருக்கு 31,683 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

திமுகவின் த்ரில் வெற்றி



இத்தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக 15 தொகுதிகளை கைப்பற்றியது. அக்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் வெற்றிபெற்றார். அண்ணா 31,861 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசன் 20,178 வாக்குகளும் பெற்றனர். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு 22,785 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்திற்கு 14,489 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் சேலத்தில் தோல்வியடைந்தார். அதேநேரத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. ஈ.வி.கே. சம்பத் மற்றும் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர். முதல் தேர்தலிலேயே அதிரடியாய் 15 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த அண்ணாவுக்கு அடுத்த தேர்தலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...(தொடரும்)