வெள்ளி, 15 ஜூன், 2012

மண்ணை கவ்விய மம்தா...



ஒரு விவசாயி வைத்திருந்த 2 உழவுமாடுகளில் ஒரு மாடு வயல்வேலைக்கு செல்லும்போதெல்லாம் முரண்டுபிடித்தது. விவசாயியும் அந்த மாட்டிற்கு பச்சைப்புல், புண்ணாக்கு தண்ணீர் போன்றவற்றை வைத்து கவனித்து வளர்த்துவந்துள்ளார். பருவமழை பெய்தபோது அந்த மாடு அளவுக்கு அதிகமாக முரண்டுபிடிக்க நொந்துபோன விவசாயி, அந்த மாட்டை அடிமாட்டுக்கு(கறிக்கு) விற்றுவிட்டு புதிய மாடுவாங்கி பழைய மாட்டுடன் ஜோடி சேர்த்துவிட்டாராம். முரண்டுபிடித்தால் கவனிக்கப்படுவோம் என்று நினைத்த அந்த மாடு, அழுதபடியே லாரியில் ஏற்றப்பட்டதாம். அந்த நிலைதான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

சாதாரண காட்டன் புடவை, ரப்பர் செருப்பு என எளிமையின் மறுஉருவமாக உலாவந்த மம்தா பானர்ஜி, தங்கள் மாநிலத்திற்கே பெருமை சேர்க்க வந்த அவதாரம் என மேற்குவங்க மாநில மக்கள் கருதினர். அதனால்தான் 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மம்தாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். மத்திய அமைச்சர் பதவியை உதறிவிட்டு மேற்குவங்க முதலமைச்சர் பதவியேற்றபோதும் மம்தாவின் நடை உடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம். அதுவரை மக்கள் தலைவியாக கருதப்பட்ட மம்தா, முதலமைச்சர் பதவியை அடைந்தவுடன் மமதையின் ராணியாக மாறத்தொடங்கினார். 35 ஆண்டுகள் ஆட்சிகட்டிலில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீழ்த்திவிட்டோம் இனியாரும் நமக்கு கால்தூசியே என்ற போக்கு அவரது பேச்சுக்களில் வெளிப்பட்டது. 



சில்லரை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு, ஓய்வூதிய சீர்திருத்த மசோதா என மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பதற்கு முன் மம்தா எதிர்த்தார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இடம்பெற்றிருந்த மம்தாவிடம் 19 எம்.பி.க்கள் இருப்பதால் மத்திய அரசும் அவரது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல திட்டங்களை நிறுத்திவைத்தது. ஒரு சில நேரங்களில் மேற்குவங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி காரியம் சாதித்தது மத்திய அரசு. மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல, மத்திய அரசின் அன்றாட செயல்பாடுகளிலேயே மூக்கை நுழைத்தார் மம்தா. இந்த முடிவு எங்களை கேட்காமல் எடுக்கப்பட்டது, இந்த விவகாரத்தில் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என அதிரடியாக மம்தா கிளப்பிய சர்ச்சைகளால் பலநேரங்களில் மத்திய அரசு திணறிப்போனது. இதற்கெல்லாம் உச்சமாக ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு அறிவித்ததற்காக, அவரது திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை உடனடியாக மாற்றியபோதுதான் அவரது மமதைப்போக்கு அம்பலமானது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்த ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் படித்ததற்காவே ஒரு அமைச்சரின் பதவியை பறித்தது இதுவரை இந்தியா பார்த்திராதது. மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதியின் பதவியை பறித்ததற்கு மம்தா கூறிய காரணம், தம்மை கலந்தாலோசிக்காமல் ரயில்வே கட்டணங்களை உயர்த்தினார் என்பதுதான். அமைச்சராக ஒருவர் பதவியேற்கும்போதே, அரசின் ரகசியங்களை பிறரிடத்தில் வெளியிடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள். இது மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ள மம்தாவுக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் கண்ணசைவின்படியே அனைத்தும் நடக்கவேண்டும் என்பதில் மம்தா உறுதியாக இருந்தார்.  ரயில்வே அமைச்சரின் பதவியை காலி செய்ததுடன், தான் கைகாட்டிய முகுல்ராய்க்கு அந்த பதவியை வழங்கச் செய்தார். அவரும் தலைமைக்கு விசுவாசம் காட்டுவதற்காக, பதவியேற்றவுடனேயே கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார். கட்டணம் குறைக்கப்பட்டது நல்லதுதான் என்றாலும், அரசின் கூட்டுமுடிவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளை, எவ்வித ஆலோசனையும் இன்றி ரத்து செய்தால் மத்தியில் அரசு எதற்கு? இவ்வளவும் மம்தாவின் கண்ணசைவில் நடந்தது. இப்படி மத்திய அரசின் முடிவுகளை தன் இஷ்டம்போல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா மாற்றினால் பிரதமர் பதவி ஏன்? (பிரதமர் ஏற்கனவே பொம்மையாக வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், அரசின் அறிவிப்புகளை அவர் வழியாகவே வெளியிடுகிறார் சோனியா)

மம்தாவின் இத்தனை ஆட்டங்களையும் மத்திய அரசு பொறுத்துக்கொண்டதற்கு காரணம் பெரும்பான்மையின்மை. கூட்டணி அரசில் முக்கிய பங்குவகிக்கும் மம்தா விலகிக்கொண்டால் அரசே கவிழ்ந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் சோனியா.

ஆனால், இதற்கெல்லாம் உச்சமாக நாட்டின் முதல்குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மம்தா அரங்கேற்றிய கீழ்த்தரமான அரசியல் அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர் என்ற மரியாதைக்காக மம்தாவை டெல்லிக்கு அழைத்தார் சோனியா காந்தி. அதனை ஏற்று டெல்லி சென்ற மம்தா, விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக முலாயம் சிங் வீட்டில் சென்று இறங்கினார். சோனியாவை மறுநாள் சந்திக்க இருந்த நிலையில் வேண்டுமென்றே முலாயம்சிங்கை மம்தா சந்திக்க காரணம், தனக்குள்ள அரசியல் பலத்தை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தவே. மறுநாள் சோனியாகாந்தியை மம்தா சந்தித்து பேசினார். அப்போது மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்து ஆதரவும் கேட்டுள்ளார் சோனியா. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் வலியச்சென்று வெளியிட்டார் மம்தா பானர்ஜி. இதேபெயர்களை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பிற கூட்டணி தலைவர்களுக்கும் ஏற்கனவே தூதர்கள் மூலம் சோனியா தெரியப்படுத்தியிருந்தார். அவர்களெல்லாம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை சோனியா அறிவிப்பார் என்று கூறியிருந்த நிலையில் மம்தா மட்டும் பெயர்களை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆச்சர்யத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே சோனியா வீட்டில் இருந்து நேரடியாக முலாயம்சிங் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி,அவருடன் இணைந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு புதிய வேட்பாளர்களை அறிவித்தார். 



அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜியுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மீது இருக்கும் வெறுப்பையே மம்தா பானர்ஜி இவ்வாறு காட்டினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறியதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. மேற்குவங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால், அவர் தமது மாநிலத்திற்கு வரும்போதெல்லாம் மரபுப்படி, மம்தா விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவும், தம்மைவிட உயர்ந்தபதவிக்கு தமது மாநிலத்தை சேர்ந்தவர் வருவதை தடுக்கவுமே பிரணாப் முகர்ஜியை மம்தா நிராகரித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமானால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 16,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும் என்ற மம்தாவின் நிபந்தனையையும் பிரணாப் ஏற்க மறுத்ததால் அவரை மம்தா நிராகரித்தார்.

தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மம்தாவின் அதிரடி அரசியல் 2 நாட்கள்கூட நீடிக்காததுதான் சோகம். இதுவரை அவர் போட்ட முட்டுக்கட்டையெல்லாம் பொறுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, தங்கள் கவுரவத்திற்கே மம்தா விடுத்த சவாலை முறியடிக்கும்வகையில் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக இன்று (15.06.2012) அறிவித்துவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நற்பெயர் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடன் சேர்ந்து அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கப்போவதாக மம்தா சூளுரைத்தாரோ அதே சமாஜ்வாதிக் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதுதான். அதுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலநிமிடங்களில் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்ததன்மூலம் மம்தாவின் முகத்தில் கரியை பூசியுள்ளது சமாஜ்வாதி கட்சி. 

இதேபோல் யாரெல்லாம் தங்களது வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று மம்தா எதிர்பார்த்தாரோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் மம்தாவின் மமதைக்கு சரியான அடி கிடைத்துள்ளதுடன், குட்ட குட்ட குனிகிறார்கள் என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த மம்தா முதல்முறையாக அவர்கள் நிமிர்ந்துகொண்டதால் மண்ணைக் கவ்வியுள்ளார். ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிப்போயுள்ளன என்பதை மம்தா இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரும் ஒருநாள் இருந்தஇடம் தெரியாமல் போய்விடநேரிடும்.... 

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மெரினா கடற்கரையில் பூவாடைக்காரி...


தம்பி ஜோசியம் பார்க்கிறிங்களா, கரெக்டா சொல்லுவேன் தம்பி... இந்த வசனங்களை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போதெல்லாம் கேட்டிருக்கிறேன். 5, 10 வருமானத்திற்காக இப்படி கேட்கிறார்கள் என்பதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போவது வழக்கம்... ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு மாலைநேரத்தில் நண்பருடன் மெரினா கடற்கரைக்கு சென்றபோது இந்தக்குரலை கேட்கவில்லை. சரி இன்றாவது ஜோசியக்காரர்கள் தொல்லை இல்லை என்ற நினைப்போடு, அலைகளின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த எங்களை, ஆள்நடமாட்டம் குறைந்த கடற்கரையின் ஒரு ஓரத்தில் ஒலித்த ஒரு பாட்டுச் சத்தம் நின்று திரும்பி பார்க்க வைத்தது. 10, 15 பெண்கள் கூடி நிற்க, 2பேர் உருமி மேளம் இசைத்துக்கொண்டு அந்த பாட்டை பாடிக்கொண்டிருந்தனர். 


ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்த நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, கூட்டத்தின் நடுவே மஞ்சள் உடையணிந்த குண்டு பெண்மணி நிற்க, அவருக்கு முன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் (பூவாடைக்காரி) உருவம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பக்தியுடன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த ஒருவர், அம்மன் முன் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணிற்கும் தீபாராதனைக்காட்டி ஏதோதோ கூறிக்கொண்டிருந்தார். வழக்கமாக கோவில் திருவிழாக்களின்போது மட்டுமே இத்தகைய காட்சிகளை பார்த்திருப்பதால், கடற்கரையில் இப்படி நடந்தது வினோதமாக இருந்தது. அதனால் கூட்டத்தோடு கூட்டமாய் சிறிது நேரம் நின்றபடி, அங்கு என்ன நடக்கிறது என ஒரு பெண்ணிடம் கேட்டோம்.


அருள் இறக்குறோம் தம்பி... பூவாடைக்காரிய வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறோம்... என்று அந்த பெண் பக்தியுடன் கூற, புரியலையே என்றோம். அதாவது தம்பி, அங்க நிக்குதே அந்தம்மாவோட மாமியார், மாமனார் செத்துபோனபின்னாடி வெளியிலேயே இருக்காங்க, அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்குத்தான் இந்த பூச, அதோ அங்க உக்காந்திருக்கே (அப்போதுதான் கவனித்தோம் கூட்டத்தின் அருகிலேயே மற்றொரு குண்டு பெண்மணி கன்னத்தில் அலகு குத்தியபடி உட்கார்ந்திருந்தார்) அந்த பொண்ணுதான் வீட்டுக்கு மூத்த மருமக, அது மேல நாகாத்தம்மன் அடிக்கடி வரும், அது வந்துதான் அவுங்க மாமியார் மாமனார் வெளியில் இருக்குறத சொல்லுச்சு, அவுகள வீட்டுல கூட்டிக்கிட்டு வரணும்னு பூசாரிங்க முடிவு பண்ணிணாங்க. அதுக்குதான் இது நடக்குது...என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாட்டு பாடியவரின் சத்தம் அதிகமாக அந்த பெண்ணும் கூட்டத்தில் ஐக்கியமானார். மறுபடியும் பூஜையும் பாட்டும்..... சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் அந்த பெண்ணிடம் எங்க இருந்து வர்றீங்க... இப்ப என்ன ஆச்சு என விசாரித்தபோது, நாங்க அம்பேத்கர் பாலம் ஏரியால இருந்து வர்றோம்.(சென்னை சிட்டி சென்டர் எதிரில்) கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நடந்த பூசையில் மூத்த மருமக மேல மாமியார் (ஆன்மா) வந்துட்டாங்க!!! அதுனால அவருக்கு அலகு குத்தி உட்கார வச்சிருக்கோம். ஆனா சின்ன மருமக மேல மாமனார் லேசுல வரமாட்டேங்குறார் தம்பி என்றார். அவரிடம் நாங்க தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் வேறொரு பெண் அருள் வந்து ஆடினார். உடனே பூசாரி, யார் நீ அப்படின்னு அதிகாரமா விசாரிச்சார், நான் பெருமாள்டா (பூசைக்காக நின்றுக்கொண்டிருக்கும் பெண்ணின் மாமனார்) என்னபார்த்தா யாருன்னு கேட்குற. அப்படின்னு பதில் சவுண்டு....

உன் சொந்தக்காரங்கிட்ட வரமா இவுங்க மேல ஏன் வந்த அப்படின்னு பூசாரி கேட்டப்போ அந்தம்மா சொன்னாங்களே பார்க்கலாம்... என் பேரை சொல்லாம மணிக்கணக்கா கூப்டா நான் எப்டிடா வருவேன்....(அடப்பாவிகளா இவ்வளவு நேரம் பேரையே சொல்லமாத்தான் பூசையா)
சரி உம் மருமக மேல வரியா.... பூசாரி
ம்ம்ம்...பாட்டுபாடி கூப்டு நான் வரேன்...... இது அருள்வந்து ஆடிய பெண் (சிறிது நேரத்தில் அவரும் மலையேறிவிட்டார்.)

மீண்டும் தொடங்கியது கச்சேரி

பூசாரியும், மேளக்காரர்களும் எத்தனையோ முறை பாடிப்பார்த்து அந்த பெண்ணுக்கு அருள் வராததால அவரோட புருஷன இழுத்துவந்து நிறுத்தனா. அந்தாளு புல் போதையில இருக்காரு...அதனால நாட்டாமை தீர்ப்பு மாதிரி செல்லாது, செல்லாதுன்னு சொல்லிட்டாரு பூசாரி....

அதுக்குள்ள இறந்தவங்களோட இன்னொரு மகன், போதை தெளியறதுக்காக கடல்ல முங்கிட்டு அப்படியே ஈரத்தோட வந்து நிக்க அதுவும் செல்லாம போச்சு..

இதுக்குள்ள கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு போரடிக்க, லேசா அருள் வந்தா போதும், அந்த பொண்ணுக்கு அலகு குத்தி கூட்டிட்டு  போவோம்னு தயாராகிட்டாங்க. உடனே பூசாரி கேட்டார்  ஏம்மா ஏதாவது தெரியுதா?(அருள் வர்றதுக்கான அறிகுறி). ம்ஹும்... ஒண்ணும்  தெரியல.. இது அந்த பெண்..

அருள் வர்றதுக்கான அறிகுறியே இல்லைன்னா அலகு குத்தக்கூடாதும்மா, அது என்ன சாதாரண காரியமா(?) நாம வீட்டுல போய் பூசைய கன்டினியூ பண்ணுவோம் அப்படின்னு பூசாரி அறிவிக்க, உடனே கூட்டம் புறப்படத் தயாரானது.. மறுபடியும் கச்சேரி பூவாடை, பூவாடையாம், பூவாடைக்காரி பாட்டோடு நகர்ந்தது அந்த கூட்டம்.

அடப்பாவிகளா... அறிவியல் வளர்ச்சியில உலகம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு.. ஆனா இன்னும் செத்தவங்கள மறுபடி வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்னு சொல்லிக்கிட்டு கடற்கரையில வந்து பூஜை நடத்திக்கிட்டு இருக்கிங்களே என்று எண்ணியபடி நாங்களும் அந்த இடத்தை விட்டு நடந்தோம்.

அலைகளின் ஓரத்திலேயே நீண்டதூரம் நடந்து சென்றாலும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் சத்ததை தாண்டி அந்த பூஜை காட்சிகளே மனதில் பிரதிபலித்தது.

பூஜைக்காக வந்திருந்த குடும்பம் படிப்பறிவில்லாத அடித்தட்டு குடும்பமாகவே இருந்தது. ஏதோ ஒரு கூலி வேலை பார்த்து பிழைப்பை ஓட்டுகிற குடும்பம் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஆனால் அந்த பூஜைக்காக மட்டும் அவர்கள் சுமார் மூன்றாயிரம் ரூபாய் வரை செய்திருப்பார்கள். (சில்வரால் ஆன அம்மன் உருவத்திற்கு மல்லிகை பூ அலங்காரம், பூஜை பொருட்கள், அலகு குத்த தேவையான பொருட்கள், 2 மேளக்காரர்களுக்கு சம்பளம், பூசாரிக்கு காணிக்கை.. etc..)

அவர்களது அறியாமையை பயன்படுத்திக்கொண்டு இவ்வளவு செலவு செய்ய வைத்தது மட்டுமல்ல... அவர்களை பலமணி நேரம் கடற்கரையில் நிறுத்தி, அலகு குத்தி, மேளதாளத்துடன் வேடிக்கைப் பொருளாக இழுத்துச்சென்ற பூசாரி கும்பலை என்ன செய்வது? சென்னை மாநகரின் நவநாகரீக மனிதர்களின் கூடாராமாக திகழும் சிட்டி சென்டரின் எதிரிலேயே வசித்துக்கொண்டு, இப்படி பூசாரிகளையும் , மூட நம்பிக்கையையும் நம்பி ஏமாறுபவர்களை எப்படி திருத்துவது?
ஒரு பெரியாரல்ல ஓராயிரம் பெரியார்கள் தோன்றினாலும் இவர்களை திருத்த முடியாதா? பெரியார் கொள்கையை பரப்புவதாக கூறிக்கொண்டு சுற்றி வருபவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? விளம்பரம் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் அவர்களது பிரச்சாரம் இருக்குமா? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எதிர்பார்ப்பில், எல்லோரையும் நம்பி ஏமாறும் அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டால் இதுபோன்ற மோசடிகள் குறையாதா? இப்படி பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமலேயே நீள்கின்றன....?????