புதன், 18 மே, 2011

கும்பிடுசாமிகளும் - கொத்தடிமை கலாச்சாரமும்...

"கும்பிடறோம் சாமியோவ்" என்று கூவாத குறைதான். கையில் டப்பாவும், கழுத்தில் ஊசிபாசிகளும் போடாமல்¢ பளிச்சிடும் வெள்ளை உடையணிந்திருந்த தமிழகத்தின் மாண்மிகுக்கள் அனைவரும் பழங்காலத்து ஆதிவாசிகளின் செயல்பாடுகளை நம் கண்முன்னே நிறுத்தினார்கள். அதில் ஒரு துளிதான் இந்த கும்பிடு.



கடந்த 16ஆம் தேதி தமிழகத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் விழா நாயகர்களான முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 34 அமைச்சர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குதல் போன்ற படுகேவலமான காட்சிகள் இல்லாவிட்டாலும், முதுகெலும்பு உடையாமல், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குனிந்து கும்பிட்டனர் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள். அத்தனையையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார் தமிழகத்தின் முதலமைச்சராக 3வது முறை பதவியேற்றுள்ள செல்வி ஜெ. ஜெயலலிதா. அவர் அமர்வதற்கான இருக்கை அமைப்பிலும் வழக்கமான நடைமுறையே! முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் 2 அடி இடைவெளிக்கு அடுத்த உட்கார வைக்கப்பட்டனர். போனால் போகிறது என்று ஆளுனருக்கு மட்டும் அருகில் இடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. (அதற்கும் இரண்டு காரணம் இருக்கலாம் 1. மரியாதையுடன் நடத்தாவிட்டால் பதவியேற்பு செய்துவைக்க அவர் மறுக்கலாம். 2. சிறிதுநேரம்தானே அங்கு உட்காரப்போகிறார். அதனால் இருந்துவிட்டு போகட்டும் என்று ஜெ. நினைத்திருக்கலாம்.) ஜெயலலிதா அளவுக்கு இல்லையென்றாலும் அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருமே ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்தானே. அவர்கள் அருகில் உட்காருவதில் என்ன கவுரவக்குறைச்சல்? தள்ளிதானே உட்காரவைத்தார்கள் இருந்துவிட்டு போகட்டும் என்று என்றால், ஆளுநர் உரிய நேரத்திற்கு வந்து சேரவில்லை. அவர் வர சுமார் அரைமணிநேரம் தாமதமானதால் ஜெயலலிதா பதற்றத்துடன் இருந்தாரோ என்னவோ, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பெரும் பதற்றத்துடனே காணப்பட்டனர். முகத்தில் வழிந்த வியர்வையைக்கூட அம்மாவுக்கு தெரியாமல் துடைக்க அவர்கள் பிரயத்தனப்பட்டனர். மேடைக்கு வந்தது முதல் இறங்கும்வரை ஒவ்வொரு முறை ஜெயலலிதா எழுந்திருக்கும்போதும், மேடையிலிருந்த அனைவரும் எழுந்திருச்சு நிற்க வேண்டும். அவர் அமர்ந்த பின்னர்தான் மற்றவர்கள் உட்கார வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டது. (தனியா பாடம் எடுத்திருப்பார்களோ என்னவோ?) இதையெல்லாம் தாண்டி பதவியேற்க சென்ற அமைச்சர்கள் விசுவாசத்தை தங்கள் ஒவ்வொரு அசைவிலும் காட்டத் துடித்தனர். பதவியேற்க பெயர் சொல்லி அழைத்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்தாலும், ‘அம்மா’வின் கடைக்கண் அனுமதியின்றி ஆளுனரின் அருகில் செல்லவில்லை. பதவியேற்று திரும்பியபோதும் தரையில் விழாத குறையாக கூழைக்கும்பிடு போட்டபடியே இருக்கைக்கு சென்றனர். என்னதான் பதவி கொடுத்திருந்தாலும் இப்படிதான் நடந்து கொள்ளவேண்டும் என்று ‘அம்மா’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தாரா என்றால் இல்லை என்றே பின்னர் ஏன் இப்படி? நல்லபெயர் வாங்குவதா நினைத்துக்கொண்டு குனிந்து குனிந்தே வாழ்ந்து பழகிவிட்டனர் அ.தி.மு.க மாண்புமிகுக்கள். நமக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு சந்தேகம்தான், முதலமைச்சரிடம் நிமிர்ந்துநின்று பேசவே பயப்படும் மாண்புமிகுக்கள் மக்களுக்காக அவரிடம் வாய்திறந்து பேசுவார்களா?
‘கொத்தடிமை கலாச்சாரம்’
அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் கூழைக்கும்பிடு ஒருபுறம் என்றால், அவர்கள்யெல்லாம் மிஞ்சி கொத்தடிமைகளாகவே செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள். அமைச்சர்கள் அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டராக இருந்து வளர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் கூழைக் கும்பிடுபோடுவதில் தவறில்லை என்று வைத்துக்கொண்டாலும்,(தவறு என்பதில் மாற்றமில்லை) இவர்களுக்கு பல படி மேலேபோய், தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் முன்பே ‘அம்மா’வின் வீட்டு வாசலில் தவமிருந்த அதிகாரிகளை என்ன சொல்வது?



‘‘அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு 5 வருஷந்தான், ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரமான அதிகாரம் கொண்டவர்கள்’’ என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சரிபட்டுவருமோ என்னவோ, தமிழகத்தில் அப்படி எந்த அதிகாரியும் இருப்பதாக தோன்றவில்லை. (ஓரிருவர் இருக்கலாம், எனக்கு தெரிந்திருக்கவில்லை) ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி தெரியத் தொடங்கினாலே அதிகாரிகளின் அந்தர் பல்டி காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிடுகின்றன. நேர்மையாக செயல்படும் அதிகாரிக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலைதேவையில்லை. ஆனால் இன்றைய அதிகாரிகள் இவர்கள் வந்துவிடக்கூடாது, அவர்கள் அந்தப் பொறுப்பேற்கக்கூடாது என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கின்றனர். நல்ல தலைவர்களை உருவாக்க இவர்கள் மெனக்கெடுகிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. யார் நம் துறை பொறுப்பை கவனிக்க வந்தால், நாம் அவர்களை கவனித்து கல்லாக்கட்ட முடியும் என்பதே இந்த அதிகாரிகளின் முழு நோக்கமாக உள்ளது. இதன்விளைவாக அரசியல்வாதிகளை அடக்கி ஆளவேண்டிய அதிகாரிகள், கட்சித் தலைவனை பார்த்தும் பணிவுடன் கும்பிடும் அடிமட்டத்தொண்டனைவிட கேவலமாக கூழைக்கும்பிடு போட்டு கொத்தடிமையாக வாழத் தொடங்கிவிடுகின்றனர். தி.மு.க. ஆட்சி என்றால் அய்யா சொன்னால் சரி, அ.தி.மு.க ஆட்சியா அம்மா சொன்னால் சரி என்பதுதான் உயர்மட்ட அதிகாரிகளின் வேதவாக்கு. ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று யாராவது ஒரு அதிகாரியிடம் கேட்டுவிட்டால் போதும், ‘‘அவர் அப்படி தொல்லை பண்றார், இப்படி பண்றார், அமைச்சர் சொல்றார், அவுங்க வீட்டுல இருந்து சொல்றாங்க’’ என்று குற்றப்பத்திரிக்கை நீண்டுகொண்டே செல்லும். கடமையிலிருந்து கடுகளவும் விலகமாட்டேன் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டால் 5 வருடத்திற்கு ஒருமுறை மாறும் அரசியல்வாதிகளால் என்ன செய்துவிட முடியும், மிஞ்சிப்போனால் இடமாற்றம் செய்யமுடியும். போகவேண்டியதுதானே, மற்றவர்களைப்போல் பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடும் என்றெல்லாம்கூட அதிகாரிகள் கவலைக்கொள்ளத் தேவையில்லையே. ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை காரணம். காரணம் பலர் கடமையைத் தவிர மற்ற செயல்களை மட்டுமே செய்கின்றனர். அதனால்தான் நிமிர்ந்து பேச திராணியற்று அரசியல்வாதிகளிடம் நெடுஞ்சாண்கிடையாய் சரணடைந்து விடுகின்றனர். ‘‘நாங்களெல்லாம் ஒரு பைசா கல்லாக்கட்டியதில்லை’’ என்று மார்தட்டும் அதிகாரிகள் கூட, என் மனைவி வேலைபார்க்கும் ஊரிலேயே இருக்கவேண்டும், எனது சொந்த ஊரிலேயே இருந்தால் வசதியாக இருக்கும், என ஏதாவது சுயலாபத்துக்காக சோரம்போகின்றனர். இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்திற்கு அதிகாரிகளை பந்தாடுகின்றனர். தமிழகத்தில் தற்போது பதவியேற்ற புதிய அரசு, பொறுப்பேற்ற 24 மணிநேரத்திற்குள்ளாக 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், தலைநகர காவல் அதிகாரியையும் அதிரடியாக மாற்றியது. கொத்தடிமைகளாகவே வாழ்ந்து பழகிவிட்ட அதிகாரிகளும் இதனை எதிர்த்து ஒருவார்த்தைக்கூட பேசுவதில்லை. எதிர்த்து பேசினால் தங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்று அச்சம். எதெற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் சங்கங்கள் இதனை ஒரு நடைமுறையாகே ஏற்றுக்கொண்டுவிட்டனர். இப்படி அடிவருடிகளாக இருந்து தங்கள் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கூட்டம் இருக்கும்வரை நேர்மையான அரசு நிர்வாகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒரே ஒரு கேள்விதான் நம்முன் நிற்கிறது ‘‘என்று மாறும் இந்த இழிநிலை’’?