ஞாயிறு, 17 ஜூலை, 2011

தமிழக கோவில்களில் தங்கச்சுரங்கம்...!!!



27.06.2011...பக்தி திருத்தலமாக மட்டுமே அதுவரை அறியப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தங்கச்சுரங்கமாக மாறத் தயாராகிக்கொண்டிருந்தது. அதனை அறியாத பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து கொண்டிருக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தது 7 பேர் கொண்ட குழு. கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்து, அதன் கீழ் இருந்த கமுக்க அறை ஒன்றை திறந்ததும் உலகின் ஒட்டுமொத்த கவனமும் கோவிலை நோக்கி திரும்பியது. காரணம் அங்கே கொட்டிக்கிடந்த தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிக்க முடியாத அணிகலன்கள்தான்.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் உள்ளது பத்மநாப சுவாமி கோவில். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலை 1733ஆம் ஆண்டில் ராஜகோபுரங்களுடன் புதுப்பித்தார் மன்னர் மார்த்தாண்ட வர்மா. அதன்பின்னர் மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்கோவிலில் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாக கடந்த 2008ஆம் ஆண்டில் போர்க்கொடி தூக்கினார் தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய காவல்பணி அதிகாரி டி.பி. சுந்தர்ராஜன். கோவில் நிர்வாகத்தை கேரள அரசே ஏற்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

சுந்தர்ராஜனின் கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தங்கள் உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியது மன்னர் குடும்பம். இந்த வழக்கில்தான், கோவிலில் கமுக்க அறைகளை திறந்து உள்ளே இருக்கும் அணிகலன்களை மதிப்பிட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதற்காக 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணைப்படி கடந்த மாதம் 27ஆம் தேதி ஆய்வை தொடங்கிய குழுவினர் முதலில், கோவிலில் இருந்த 6 கமுக்க அறைகளுக்கும் தனித்தனி பெயரிட்டனர். அவற்றில் 2 அறைகள் மட்டும் 136 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகளின் ஆய்வு அங்கிருந்து தொடங்கியது.

முதல் அறையைத் திறந்ததுமே தங்க, வைர நகைகள், சிலைகள், கிரீடங்கள் என மலை மலையாகக் குவிந்து கிடந்த பொற்குவியலைக் கண்டு மலைத்து நின்றனர் அதிகாரிகள். அறைக்கு உள்ளேயே மேலும் சில அறைகள் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றையும் திறந்தபோது அங்கேயும் குவியல் குவியலாக அணி மணிகள்¢ கொட்டிக்கிடந்தன.


18 அடி நீளமுள்ள தங்க அங்கி, சரம் சரமாக தங்கச் சங்கிலிகள், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட 4 அடி உயர விஷ்ணு சிலை, ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க காசுகள், மரகத கல் பதிக்கப்பட்ட அணிகலன்கள் என நீண்டு கொண்டே சென்றது பொற்குவியலின் பட்டியல். அள்ள அள்ள குறையாத அணிகலன்களின் மதிப்பு முதலில் 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஒரு லட்சம் கோடி, ஒன்றரை லட்சம் கோடி என்று சொல்லப்பட்டாலும், உண்மையான மதிப்பு 5 லட்சம் கோடியை தாண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

136 ஆண்டுகளாக திறக்கப்படாத மற்றொரு அறையின் பூட்டை திறக்க முடியாததால் அந்த அறையில் இருக்கும் நகைகளை மதிப்பிட முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்ற ஆணையைப் பெற்று அதனையும் திறந்தால் பொற்குவியலின் மதிப்பு தற்போதுள்ள மதிப்பைவிட 10 மடங்கு உயரும் என்ற தகவல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு சுரங்க அறை நகைகள் மூலமே உலகின் பணக்கார கடவுளாக மாறிவிட்ட பத்மநாப சுவாமிக்கு, புகழுடன் சேர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இதே பாதுகாப்பு அச்சுறுத்தலால்தான் பொற்குவியல் சேர்ந்ததற்கும் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். போர்வெற்றி, நன்கொடைகள் மூலம் ஏராளமான ஆபரணங்களை சேர்த்த மன்னர்கள், வெளிநாட்டு படையெடுப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்க அனைத்தையும் கோவில்களில் குவித்து வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.


வறட்சியான காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதும் மன்னர்கள் நகைகளை குவித்ததற்கு முக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை, அந்த உயரிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்தையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவிலுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பதன் மூலம் பொற்குவியல் விவகாரம் தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் குமரி பகுதியை ஆண்ட மன்னர்களும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பொற்குவியலை வழங்கியதாக கூறப்படுவதால் அதில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருப்பதாக குமரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுசீந்திரம், வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பொற்குவியலில் உள்ள பங்கை மீட்கக்கோரி கையெழுத்து இயக்கமே நடத்தப்பட்டுள்ளது.


பொற்குவியலில் பங்கு கேட்டு ஒருபுறம் போர்க்கொடி உயர்த்தப்படும் அதேநேரத்தில், தமிழகத்தில்¢ உள்ள முக்கிய கோவில்களிலும் பொற்குவியல் கொட்டிக்கிடப்பதாக புதிய பூதம் கிளம்பியுள்ளது. திருச்சி திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சை பெரிய கோவில், போன்ற முக்கிய கோவில்களில் சுரங்க அறைகளில் நகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் வரலாற்று ஆய்வாளர்கள், அவை இருக்கும் இடங்களைக்கூட துல்லியமாகக் கூறுகின்றனர். உதாரணமாக திருவரங்கத்தில் கருடாழ்வார் சிலைக்கு அருகே 2 அறைகளில் பொற்குவியல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொற்குவியலோடு சேர்த்து பெருமாள் இருந்த கர்ப்பகிரகமே கமுக்க அறையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பரவும் புதுப்புது தகவல்களால் முக்கிய கோவில்களில் பழைய ஆவணங்கள் புரட்டப்பட்டு வருகின்றன. பல இடங்களில் கமுக்க ஆய்வுகள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.




கோவில்களுக்குள் புதைந்து கிடக்கும் நகைகளைக் கண்டுபிடிப்பது வரவேற்புக்குரிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பழமையின் சின்னமாக விளங்கும் அவைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் மட்டுமே முன்னோர்கள் எண்ணம் நிறைவேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக