புதன், 13 ஜூலை, 2011

அரசு ஒப்பந்தம் பெற இளம்பெண் வினியோகம்...

தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியின் ஒரு ஓரத்தில் இருக்கிறது கண்ணுமாமூடு கிராமம். தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை அருகே இருக்கும் இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு மாளிகையில் கடந்த 23ஆம் தேதி அதிரடியாய் நுழைந்த கேரள மாநில காவல்துறை ஊர்திகள். நீண்ட நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னரே சொகுசு மாளிகையின் உரிமையாளரான ஒப்பந்ததாரர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானது. சிங்கப்பூர் தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்காக கண்ணுமாமூடு கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தனர். நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் இருந்து மணிகண்டனை ஈப்பில் ஏற்றி அழைத்துச் சென்ற காவல்துறையினர் அதற்கான காரணங்களை வெளியிட்டபோது கண்ணுமாமூடு கிராம மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர். ஏழை மக்களுக்கு உதவுவதாக அதுவரை நடித்து வந்த மணிகண்டன், கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 18வயது இளம்பெண்ணை தனது மாளிகையில் வைத்து சீரழித்து விட்டார் எனத் தெரிந்ததும் மக்கள் ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

ஆவேசத்துடன் கூடிய மக்கள் கூட்டத்தை கண்டதும் சொகுசு மாளிகையை சூழ்ந்திருந்த மணிகண்டனின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மக்கள் மீதும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் கல்வீசி தாக்கல் நடத்தப்பட்டது. இதையும் மீறி செய்தியாளர்கள் படமெடுத்தபோதும், சொகுசு மாளிகையில் இருந்து அனைத்து தடயங்களையும் அழித்திருக்கிறார்கள் மணிகண்டனின் ஆதரவாளர்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பராவூரைச் சேர்ந்த துணைநடிகரான சுதீர் என்பவரது மகள்தான் அந்த இளம்பெண். 12வது படித்து வரும் அந்த பெண்ணை அவரது தந்தையே விலைமாதாக மாற்றிய நிகழ்வு கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இவ்வழக்கில் நடிகர், எர்ணாகுளத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர், தமிழகத்திற்கும் அந்த இளம்பெண் அழைத்து வரப்பட்டு சீரழிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதன் தொடர்ச்சியாகவே மணிகண்டன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வந்து விழுந்த தகவல்கள் பல்வேறு அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழித்துப்போடப்பட்டுள்ளது. காலம் காலமாக கையூட்டு வாங்கிக் கொண்டு அரசுப்பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக புகார் கூறப்படுவதால், பணம் பெறுவதற்கு பதிலாக மாற்றுத் திட்டங்களை வகுத்துள்ளனர் அதிகாரிகள். வீட்டிற்கு தேவையான பொருட்களை பெறுதல், வீட்டு மனைகளாக வாங்கிக் கொள்ளுதல், என பணிகளுக்கு தக்கபடி அதிகாரிகளின் நிபந்தனைகள் விரிகின்றன.

அளவுக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பொருட்கள் என வாங்கிக் குவித்துவிட்ட அதிகாரிகள் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளனர். அதுதான் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கு இளம் பெண்ணை கேட்கும் குரூர அத்தியாயத்தின் தொடக்கம். இந்த கொடுமைக்கு கன்னியாகுமரி ஒப்பந்ததாரர் மணிகண்டனின் கைது நேரடியாக சாட்சியாக மாறியுள்ளது. கேரளாவில் பெற்றோராலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம் பெண்ணை தமிழகம் அழைத்து வந்த மணிகண்டன், தனது தேவையை தீர்த்துக் கொண்டதுடன், பல்வேறு அதிகாரிகளின் ஆசைகளை நிறைவேற்றவும் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த மணிகண்டன், பணி ஒப்பந்தம் பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் எடுத்து செய்த பணி ஒன்றை எதிர்த்து போராடிய நபர் மர்மமான முறையில் இறந்து போனதையே இதற்கு சாட்சியாக சொல்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்ததாரராக இருந்த மணிகண்டன், தற்போது நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு மாளிகை, மகிழுந்து, வேறு பல ஊர்திகள் என உல்லாசமாக உலாக வந்ததை சுட்டிக்காட்டும் மக்கள், இவை அனைத்துக்கும் அதிகாரிகளின் ஆசிர்வாதமே முக்கிய காரணம் என்கின்றனர். கேரளாவிலும் தனது தொழிலை விரிவுபடுத்திய மணிகண்டன், சின்னத்திரை தொடர்கள் தயாரிப்புக்கும் பண உதவி செய்து வந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி பல கேரள சின்னத்திரை நடிகைகளையும் தமிழகத்திற்கு அழைத்து வந்தாராம் மணிகண்டன். அப்படி அழைத்து வரப்பட்ட அனைவருமே அதிகாரிகளுக்காகத்தான் என்கின்றனர்.

அதிகாரிகளுக்கு பெண்ணாசை காட்டியே தனது தொழிலை வளர்த்துக் கொண்ட மணிகண்டன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து துறை அலுவலகங்களிலும் நெருக்கமான வட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக துறை வாரியான பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை மட்டுமின்றி மாவட்ட அளவில் பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகளையும் தக்கமுறையில் மகிழ்வித்துவந்தாராம் மணிகண்டன். பணிகள் வழங்கும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் தனது தெரிந்த காவல்துறை அதிகாரிகளுடனும் கேரளத்து இளம் பெண்ணை மணிகண்டன் அனுப்பியுள்ளார். இந்த தைரியத்தில்தான் கேரள காவல்துறையினர் தன்னை கைது செய்தபோது கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். தன்னால் பயனடைந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளின் மிகப்பெரிய பட்டியலையே கேரள காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் மணிகண்டன். அதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு வீடு, நிலம், போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக் கொண்ட மணிகண்டன், நிலப்பிரச்சனை காரணமாக தன்னை மாட்டி விட்டதே கேரள காவல்துறை அதிகாரி டோமின் தங்கச்சரிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரள காவல்துறையினரிடம் மணிகண்டன் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமூலமும் தமிழகத்தில் சில அதிகாரிகளின் பதவிக்கே ஆபத்தாக முடியும் என்பதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பல காவல்துறை அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் அதேநேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் யார்? யார்? இதுவரை அவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் யார்? என ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கன்னியாகுமரியோடு முடிந்துவிடவில்லை இந்த பெண் விவகாரம், இளம்பெண்ணின் தந்தையான சுதீர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்ட மணிகண்டன், அந்த பெண்ணை சென்னை, உதகை, கொடைக்கானல் என பல ஊர்களுக்கும் பல அதிகாரிகளோடு அனுப்பியதும் அம்பலமாகியுள்து. இதனை உண்மையாக்கும் விதத்தில் கோவையைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் கைதாகியுள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பாளையம் வடமதுரையை சேர்ந்த முருகேசன், பெரும் வசதி கொண்டவரல்ல என்பதால், ஏதாவது ஒரு ஒப்பந்ததாரர் மூலமே அவருக்கு கேரள பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு உதவிய ஒப்பந்ததாரர் யார்? உதவிக்கான கைமாறாக முருகேசன் என்னவெல்லாம் செய்து கொடுத்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கேரள காவல்துறையினரிடம் முருகேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தமிழக அதிகாரிகள் 9 பேர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளதால் மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மணிகண்டன் போன்ற ஒரு சிலர் மட்டுமின்றி தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான அரசுப் பணிகள் இதுபோன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இப்படி அற்ப ஆசைக்காக அரசுப் பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படும் அவலம் அம்பலமாகியுள்ளதால், குறுக்கு வழியில் ஒப்பந்தம் பெற்ற மணிகண்டன் போன்ற ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பல பணிகள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றுள்ளதாக புகார் கூறியுள்ள பொதுமக்கள், இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு அதிகாரிகளை கேரள காவல்துறையினர் கைது செய்தபோதும், இங்குள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காப்பதும் பொதுமக்களின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்குக்கூட இது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு செயல்படாவிட்டால் முறைகேட்டாளர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் துணைபோவது போல் ஆகிவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


மக்கள் நலனுக்காக அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்துவதில் முறைகேடுகளும் மோசடிகளும் தலைவிரித்தாடுவதால் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் உணர வேண்டியவர்கள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

3 கருத்துகள்:

ad சொன்னது…

நாய்களை கட்டிவைத்து சுடவேண்டும்.

முனிசாமி. மு சொன்னது…

சரியான கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி...

Robin சொன்னது…

சினிமா நடிகைகளின் பெற்றோரும் இதைத்தானே செய்கின்றனர்!

கருத்துரையிடுக