வெள்ளி, 4 மார்ச், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_01

1956, மே 17.
பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களால் திணறிக்கொண்டிருந்தது திருச்சி மாநகரம். திமுகவின் 4 நாள் மாநாடு அன்று தொடங்கியதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சாரைசாரையாக மலைக்கோட்டை மாநகரில் அணி திரண்டனர் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி சகாப்தம் தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவாக அமைந்த அந்த மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது குறித்து ஜனநாயக முறைப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு தனித்தனி வண்ணங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கெடுப்புத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் தொண்டர்கள் போட்டி போட்டு தங்கள் கருத்துகள் அடங்கிய சீட்டுக்களை பெட்டியில் போட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் எண்ணம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாகவே இருந்தது. உயர்ந்த எண்ணத்தால் நிறைந்திருந்த அவர்களின் மனங்களை குளிர வைக்கும் வகையில் கனமழையும் கொட்டியது. நீண்டநேரம் கொட்டிய மழையிலும் வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்றது. முடிவில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருந்தது. இதனை வலியுறுத்தி 56,942பேர் வாக்களித்த நிலையில், இக்கருத்துக்கு எதிராக 4,203 பேர் வாக்களித்தனர். இந்த முடிவுகளின் படி தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் மாநாட்டில் வகுக்கப்பட்டது.

அதேநேரத்தில் தமிழகத்துடன் இணைந்திருந்த ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்த தலைவர்கள் ஒருபுறமும், குலக்கல்வியை அறிமுகப்படுத்தியதால் முதலமைச்சர் பதவியை இழந்த ராஜாஜியின் ஆதரவாளர்கள் மறுபுறமும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 2வது நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக முதல்முறையாக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும் களமிறங்கியது.

தன்னம்பிக்கை தளராத கர்மவீரர்

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருந்த பிளவு இத்தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. சாத்தூரில் போட்டியிட்ட முதலமைச்சர் காமராஜரை எதிர்த்து அவரது கட்சியினரே சீர்திருத்த காங்கிரஸ் என்ற பெயரில் ஜெயராம ரெட்டியார் என்பவரை வேட்பாளராக நிறுத்தினர். அதேநேரத்தில் திமுக தேர்தலில் பங்கேற்பதை விரும்பாத தந்தை பெரியார் காமராஜருக்கு ஆதரவளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களுக்கு காமராஜர் செய்த நன்மைகளுக்காக அவரை சொந்தக்கட்சியில் உள்ள பிராமணர்களே தோற்கடிக்க முயற்சிப்பதாக கூறியிருந்தார். காமராஜரை முதலமைச்சராக நீடிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் பெரியார் அறிவித்தார்.



சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தாலும் பெரியாரின் ஆதரவை காமராஜர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பெரியாரின் திராவிடர் கழகம் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தால் அவது அவர்களது இஷ்டம். நான் அதை கேட்கவில்லை” என்று அதிரடியாய் அறிவித்தார்.



காங்கிரஸ், திமுக, சீர்திருத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் என ஏராளமான கட்சி வேட்பாளர்களும் களமிறங்கியதால் தேர்தல் பரப்புரை களை கட்டியது. விறுவிறுப்பான பல நிகழ்வுகளுக்கு மத்தியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி காமராஜர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராஜருக்கு 36, 400 வாக்குகளும், ஜெயராம ரெட்டியாருக்கு 31,683 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

திமுகவின் த்ரில் வெற்றி



இத்தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக 15 தொகுதிகளை கைப்பற்றியது. அக்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் வெற்றிபெற்றார். அண்ணா 31,861 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசன் 20,178 வாக்குகளும் பெற்றனர். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு 22,785 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்திற்கு 14,489 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் சேலத்தில் தோல்வியடைந்தார். அதேநேரத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. ஈ.வி.கே. சம்பத் மற்றும் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர். முதல் தேர்தலிலேயே அதிரடியாய் 15 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த அண்ணாவுக்கு அடுத்த தேர்தலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...(தொடரும்)

5 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அருமையான தொகுப்பு. அடுத்து எப்பவென்று ஆவலை தூண்டுகிறது

முனிசாமி. மு சொன்னது…

நன்றி...

சிவப்ரியன் சொன்னது…

Nice Article. Please keep up the Good work.
Congrats.

முனிசாமி. மு சொன்னது…

நன்றி... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமையான தொகுப்பு..
படித்தேன் நன்று மற்றும் வாழ்த்துக்கள்..

கருத்துரையிடுக